Friday, October 14, 2011

கணிணி இல்லையா?. கால்நடைதான்

முன்பெல்லாம் விமானப்பயணம் என்பது பெரிய பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய பயணமாக இருந்து வந்தது. சரி, இப்போது என்ன, அது ஏழைகளின் வாகனமாக மாறி விட்டதா?. அதுதான் இல்லை. மாறாக இதுவரை ஏழைகளின் வாகனமாக இருந்து வந்த ரயில் பயணம், பஸ் பயணம் ஆகியவையும் இப்போது பணக்கார்களின் வாகனமாக ஆகிவிட்டது. விமானப்பயணம் செல்ல வேண்டுமானால் அதிக பட்சம் ஒரு ட்ராவல் ஏஜென்ஸியை அணுகினால் போதும். ஆனால், ரயில் பயணம், (இப்போது பஸ் பயணமும் சேர்ந்துகொண்டது. உபயம்: இன்றைய த்மிழ்நாடு அரசு) செல்ல வேண்டுமானால் முதலில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும். நீங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ண கற்றுக்கொள்ள வேண்டும், அடுத்து இண்ட்டர்நெட் கனெக்ஷன் வாங்க வேண்டும். அதன்பிறகே ரயில் பயணம் அல்லது பஸ் பயணம் செல்ல வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் காரணம், இந்த வசதிகொண்டவர்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே செய்துகொள்ளும் 'ஆன்லைன் புக்கிங்'. சரிப்பா, வசதி படைத்தவர்களுக்கு கால் நோகாமல் புக்கிங் செய்துகொள்ள இந்த வசதிகளை அறிமுகப்படுத்தினாலும், அதுக்கு பாதி இடங்களை ஒதுக்கிக்கொண்டு, பாதி இடங்களையாவது ரயில்வே ஸ்டேஷனில் கியூவில் கால்கடுக்க நிற்கும் அன்றாடங்காய்ச்சிக்கு ஒதுக்கலாமல்லவா?. அதை செய்ய மாட்டார்களாம்.
ஊருக்குச் செல்வதற்காக கால்கடுக்க நெடுந்தூரம் மக்கள் கியூவில் நிற்கும்போது, கவுண்ட்டரைத் திறந்ததும் இரண்டே பேருக்கு கொடுத்து விட்டு 'ஃபுல்' ஆகிவிட்டது என்று அறிவித்ததும் ஏமாற்றத்தோடு செல்கிறானே அந்த ஏழையின் முகத்தை எந்த அரசியல்வாதியாவது நினைத்துப்பார்க்கிறானா?. அவனும் ஓட்டுப்போட்டுத்தானே நீ வந்து உட்கார்ந்தாய்?.

பண்டிகைக்காலங்களுக்கு சிறப்பு ரயில் என்று தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் அறிவிப்பார்கள். அதைப்பார்த்துவிட்டு அதிகாலையிலேயே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் கால்கடுக்க கியூவில் நிற்பவனுக்கும் அதே கதிதான். கவுண்ட்டரைத்திறக்கும்போதே 'ஃபுல்' என்று அறிவிப்பார்கள். அதாவது அத்தனை டிக்கட்டுகளையும் 'ஆன்லைன்' சோம்பேறிகள் வாங்கி விட்டார்களாம். ஏழை, நடுத்தரவாதிக்கு பட்டை நாமமாம்.
சரி, இதுவரை ரயில் பயணத்தில்தான் இந்த மோசடி, ஏமாற்றம் என்றால், இப்போது பேருந்திலும் ஆன்லைன் புக்கிங்கை துவக்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ரயில் டிக்கட் கிடைக்காவிட்டால் பஸ்ஸிலாவது போகலாம் என்று எண்ணியிருந்த ஏழை வாயில் மண் விழுந்து விட்டது. இனிமேல் கம்ப்யூட்டர் பிரகஸ்பதிகள், ரயில் டிக்கட் 'ஃபுல்' ஆனதும் பஸ் டிக்கட்டையும் வளைத்துப்போட்டு விடுவார்கள். இதில் இன்னொரு பெரிய மோசடி, 'ஆன்லைன்' புக்கிங் மூலம் பெருவாரியான டிக்கட்டுகளை ட்ராவல் ஏஜெண்ட்டுகள் புக் பண்ணி வைத்துக்கொண்டு, கடைசி நேரத்தில் வருவோரிடம் ஒண்ணுக்கு நாலாக கட்டணம் வசூலிப்பதுதான்.
இப்படி பல்வேறு வழிகளிலும் மோசடி நடக்கும் இந்த 'ஆன்லைன்' புக்கிங் தேவையா?. தேவையில்லையெனில் ஓட்டுப்போட்ட மக்கள் ஏன் சும்மாயிருக்கிறீர்கள்". ரயிலில் ஆன்லைன் புக்கிங்கை நீக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும். பஸ்ஸில் ஆன்லைன் புக்கிங்கை ஒழிக்க வேண்டுமென்று சட்டமன்றத்திலும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் உங்கள் எம்.பி.க்களையும், எம்.எல்.ஏ.க்களையும் நிர்ப்பந்தியுங்கள். அப்படி குரல் கொடுக்காவிட்டால் அடுத்த கூட்டத்தொடர் முடிந்தபின் அவர்கள் வீடுகள் இருக்கும் இடங்கள் வெறும் மணல் மேடாகும் என்று எச்சரியுங்கள். முடிந்தால் அவர்களை தெருவில் இழுத்துப்போட்டு சாத்துங்கள். தப்பேயில்லை.
கேட்க பயமாக இருக்கிறதா?. கணிணி இல்லாதோர் இப்போதே குடும்பத்தோடு கால்நடைப்பயணம் துவங்குங்கள். இந்த தீபாவளிக்குப்புறப்பட்டால், அடுத்த தீபாவளிக்காவது திருநெல்வேலி போய்ச் சேர்ந்து விடலாம்.

Wednesday, October 12, 2011

அன்னமிட்ட கைகளுக்கு

"அன்னமிட்ட கைகளுக்கு...."  (இரு மலர்கள்)

'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.

திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.

ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.

கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.

இப்படத்தின் மற்ற பாடல்களான 'மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்' மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' ஆகிய பாடல்கள் களத்தின் ஜாம்பவான்களால் ஏற்கெனவே அருமையாக அலசப்பட்டு விட்டது.

'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க.......  எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொண்டிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......
.............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நேரமில்லை மகளே

கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
என் தலைமகளே உன் பெருமை ஊர்சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் .

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தான் பெற்று வளர்த்த குழந்தையைப் பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் நெஞ்சைப் பிழிந்தெடுக்க சோகமே உருவாய் கே.ஆர்.விஜயா (சொல்லணுமா, அவருக்கு இந்த மாதிரி ரோல்கள் அல்வா சாப்பிடுவது போல), தன்னுடைய அம்மா எதைப்பற்றிப் பாடுகிறாள் என்று புரியாமல் கட்டிலில் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு விழியோரங்களில் கண்ணிருடன் ரோஜாரமணி. (இது குறித்து ரோஜாரமணியுடன் (தற்போது நடிகர் தருணின் அம்மா)  சமீபத்தில் 'காமராஜர் அரங்கில்' நான் உரையாடியதை அடுத்த முறை விவரமாகத் தருகிறேன்).

எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு.

Enjoy audio here (song no: 61)

Tuesday, October 11, 2011

திருடன்

'திருடன்' படம் இப்போது பார்க்கும்போது மேலும் மெருகு ஏற்றப்பட்டதுபோல தோற்றமளிக்கிறது. மிக இயல்பான நடிப்பு. ஆம், இன்றைய கதாநாயகர்கள் (சிலர்), வில்லனைப்பார்த்து... 'டேய்' என்று ஆரம்பித்து தொடர்ந்து காட்டுக்கத்தல் போடுவதைப்பார்க்கும்போது (இவற்றையெல்லாம் 'ஓவர் ஆக்டிங்' என்று அழைக்க பலருக்கு வாய் வலிக்கும்), திருடன் படத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பு ரொம்பவே இயல்பாக இருக்கிறது.

குளக்கரையில் அமர்ந்து கே.ஆர்.விஜயாவிடம், தான் சிறைக்குச்செல்ல நேர்ந்த காரணத்தைச்சொல்லும்போது, நாம் எங்கே எங்கே என்று ஏங்கும் அந்த ஃப்ளாஷ்பேக் வந்து விடுகிறது...

தனது பாஸ் பாலாஜி தூக்கியெறியும் தொப்பியை கீழே விழ விடாமல் குண்டுகளால் துளைத்து அதை ராமதாஸ் தலையில் விழவைக்கும்போது,  அவரது துப்பாக்கி சுடும் ஸ்டைல் ரொம்பவே மனதை அள்ளுகிறது. அதேபோல, சினிமா ஷூட்டிங் நடத்துவது போல, பட்டப்பகலில் கூடியிருக்கும் மக்களின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு, சேட் இடமிருந்து பணப்பெட்டியை கொள்ளையடிக்கும் காட்சியில் தொப்பியும் குளிர்க்கண்ணாடியுமாக காட்சியளிக்கும் ஸ்டைல், மற்றும் சசிகுமார் தம்பதியிடமிருந்து வைர நெக்லஸைக் கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் யுவராஜா மற்றும் யுவராணியாக அவரும் விஜயலலிதாவும் ஆடும் 'கோட்டைமதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடலின்போது அவர் காட்டும் ஸ்டைல்.... இப்படி எதிலும் செயற்கைத்தனம் தெரியவில்லை.

பிளாக் மெயில் பண்ணி பணம் பறிப்பதற்காக ஒருகுழந்தையைத் திருடிவரச்சென்ற இடத்தில், குழந்தையைக்காணாமல் அதன் தாய் கதறி மூர்ச்சையாகி விழ, இறந்துபோன தன் தாய் மனக்கண்முன் வந்து சாபமிட, மீண்டும் குழந்தையை அவளிடம் ஒப்படைப்பதற்காக குழந்தையைக்கேட்டு, ஸ்டண்ட் மாஸ்ட்டர் திருவாரூர் தாஸுடன் அவர் போடும் சண்டைக்காட்சி அற்புதம். ஒல்லியான உடம்பாதலால் நல்ல சுறுசுறுப்பு, ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

சிறையிலிருந்து விடுதலையான பின் திருந்தி வாழும் தன்மீது எப்போதும் சந்தேகப்பார்வையை வீசும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (முன்னர் இவரைக்கைது செய்த) மேஜரிடம், ராஜு (சிவாஜி)யின் மகள் குதிரைப்படம் வரைந்து கேட்க, மேஜர் வரைந்து தரும் படத்தைப்பார்த்து குழந்தை ராணி,... 'அய்யோ இன்ஸ்பெக்டர் அங்கிள். இது குதிரையில்லே கழுதை' என்று சொல்ல...

'என்னப்பா ராஜு, நான் குதிரைப்படம் வரைந்து கொடுத்தால் உன் மகள் கழுதைன்னு சொல்றாளே'

'உங்களைப்பத்தி என்னைவிட என் மகள் நல்லா புரிஞ்சு வச்சிருக்கா'

'என்ன சொல்றே நீ..?'

'உங்களுக்குத்தான் குதிரைக்கும் கழுதைக்கும் வித்தியாசம் தெரியாதே'. (வசனம்: ஏ.எல்.நாராயணன்)

சிறையிலிருந்து ரிலீஸானதும் தான் எவ்வளவு முயற்சித்தும் தன்னுடைய கொள்ளைக்கும்பல் பக்கம் திரும்பாத சிவாஜியைப்பழி வாங்க, இறுதியில் பாலாஜியால் கடத்தப்பட்ட தன் மகள் ராணியை மீட்டு வரச்செல்லும்போது, மனைவி கே.ஆர்.விஜயாவிடம், விரக்தியான முகபாவத்துடன் அவர் பேசும் வசனங்கள் ரொம்பவே யதார்த்தம், 'திரும்பினால் நம்ம பொண்ணோடுதான் திரும்புவேன். இல்லேன்னா'..... கொஞ்சம் நிறுத்தியவர் 'எதுக்கும் எனக்கு இப்பவே வாய்க்கரிசி போட்டு அனுப்பிடு' என்னுமிடத்தில் அவருடைய முகபாவம் அபாரம்.

இப்படி ஒவ்வொன்றையும் பார்க்கும்போதும். 1980-க்கு முன் வந்த படங்கள் ஒவ்வொன்றும் அமோகமாக ஓடியிருக்க வேண்டிய படங்களாகவே எண்ணத்தோன்றுகிறது.

Tuesday, June 28, 2011

ஆக்கம் பெறுமா 'ஹாக்கி'

நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது வரையில் நமக்குத்தெரியும். ஆனால் இவ்விளையாட்டுக்கு அரசுகள் தரும் ஊக்கம் (?), ஸ்பான்ஸர்கள் தரும் ஆதரவு(?), ரசிகர்கள் அளிக்கும் உற்சாகம் (?) இவற்றைக் காணும்போது நான் சொன்ன முதல் வரியை நம்புவது கடினம். அரபு நாடுகளின் தேசிய விளையாட்டான கால்பந்துதான் அந்நாடுகளின் ரசிகர்கள் மனதிலும், அரசின் ஊக்குவிப்பிலும் முதலிடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பாஸ்கட் பாலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பேஸ்பாலும் அப்படியே. ஏன் எல்லா நாடுகளிலும் தேசிய விளையாட்டுக்கே முதலிடம். 

ஆனால், நமது இந்திய ரசிகர்களின் மனதில் முதலிடம் பெறுவது கிரிக்கெட் என்பது 200 சதவீதம் உண்மையென்பதில் ஐயமில்லை. இரண்டாம் இடம் கால்பந்து, மூன்றாவது இடம் டென்னிஸ், பின்னர் கபடி, குத்துச்சண்டை...... உண்மையில் நமது தேசிய விளையாட்டான ஹாக்கி எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத புதிர். எப்படி இந்த அவல நிலை உருவானது?. ஒரு காலத்தில் ஹாக்கியில் கொடிகட்டிப்பறந்த நமது பாரம்பரியம் என்னவாயிற்று?. ஒருகாலத்தில் நமது ஹாக்கி வீரரான பியான்சந்த் போன்றவர்களைப் பார்த்து, உலக ஹாக்கி அணி வீரர்கள் நடுங்கிய காலம் ஏன் மலையேறிப்போனது?.  

பியான்சந்திடம் பந்து கிடைத்துவிட்டால் அது நிச்சயம் கோல்தான் என்று ரசிகர்கள் முடிவு செய்யும் வண்ணம், தன் வளைந்த மட்டையால் பந்தை சுழற்றி சுழற்றிக் கொண்டுபோய் எதிரணி கோல்கீப்பரை கிலியடையவைப்பதன் மூலம், 'இவர் கையில் இருப்பது மட்டையா அல்லது மந்திரக்கோலா' என்று ரசிகர்களை வியப்படைய வைத்த காலம் எல்லாம் போய், இப்போது பாஸிங் என்பதே அரிதாகிப்போன நிலையில், இப்போது வீரர்களிடம் பந்து கிடைத்தால் Hit & Run என்ற முறையில், (அடித்து விட்டு பந்தின் பின்னால் ஓடுவது) என்பது என்ன வகையான பயிற்சிமுறை?. 'தாக்குதல் ஆட்டம்' ஆடுவதற்குப்பதில் 'தடுப்பாட்டம்' ஆடினால் போதும், அதாவது தான் கோல் போடுவதைவிட, எதிரணி கோல் போடாமல் தடுப்பதுதான் ஆட்டம் என்பது போல பயிற்சிமுறைகள் கீழிறங்கிய பின்னும், நமது வீரர்கள் நன்றாகவே ஆடுகிறார்கள் என்பது ஆறுதல் என்றால், அவர்களுக்குப் போதுமான ஊக்கம் அளிக்கப்படுவதில்லை என்பது நிச்சயம் வேதனையே.

போதுமான ஊக்கம், உற்சாகம், ஆதரவு இவற்றைத்தராமல் சும்மா போய் மெடலை அள்ளிக் கொண்டுவா என்று நிர்ப்பந்தப்படுத்தினால் அவர்களும் என்ன செய்வார்கள்?. சென்ற முறை உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 'சூப்பர் எட்டுக்குள்' கூட நுழைய முடியாமல் திரும்பிய இந்திய அணியை, ரசிகர்களும், ஸ்பான்ஸர்களும் கைவிட்டு விட்டார்களா?. தொடர்ந்து ஊக்கம் தந்து இம்முறை கோப்பையை வெல்ல வைக்கவில்லையா?. ஆனால் ஹாக்கியில் இந்தியா தோற்றால் போச்சு, ஆயிரத்தெட்டு குறை சொல்லி சவக்குழியில் தள்ள தயாராக இருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லும் குறையென்ன?. 'இவங்க என்னப்பா, ஒரு மேட்ச் முடிந்து வந்து மட்டையை (ஸ்டிக்) கீழே வைத்தால், அடுத்த மேட்சுக்குத்தான் கையில் எடுக்கிறாங்க' என்பதுதானே. வாதத்துக்கு அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், அவர்களை ஊக்கப்படுத்தாதது யார் குற்றம்?. எத்தனை இடங்களில்தான் அவர்கள் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் ஆடிக்கொண்டிருப்பார்கள்?. தங்கள் கண்முன்னே மாவட்ட அளவிலான கிரிக்கெட்டுக்குக்கூட ரசிகர்கள் கூட்டம் திரளும்போது, ஹாக்கிக்கு தேசிய அளவிலான போட்டிகளில்கூட காலரிகள் காலியாக இருப்பதைப் பார்த்து ஹாக்கி வீரர்கள் விரக்தி அடைவது இயற்கைதானே.

கிரிக்கெட் வீரர்களில் பட்டோடி நவாப் மன்ஸூரலிகானில் துவங்கி சுரேஷ் ரெய்னா வரையில் குறைந்தது நூறு கிரிக்கெட் வீரர்களின் பெயரை மூச்சுவிடாமல் சொல்லத்தெரிந்திருக்கும் நமது இளைஞர்களுக்கு நமது ஆக்கி வீரர்கள் எத்தனை பேரை சொல்லத்தெரியும்?. (அன்றைக்கு ஒரு மேட்சில் ரசிகர்கள் கேலரி பக்கம் கேமரா திரும்பியபோது அங்கிருந்த ஒரு மாணவி ஒரு அட்டையில் ‘Hi Raina, Marry me என்று எழுதி, அதைக் கேமராவுக்கு காட்டியபோது ஆச்சரியம் அடைந்தேன்). டென்னிஸில்கூட லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா என்று உள்நாட்டவர் மட்டுமல்லாது ரோஜர்பெடரர், ரபேல் நடால், வீனஸ் வில்லியம்ஸ், மரிய ஷரபோவா என்று சர்வதேச நட்சத்திரங்களைக் கூட அனாயாசமாகச் சொல்கின்றனர். ஆனால் ஹாக்கி வீரர்களை யாருக்குமே தெரியவில்லை.

ஒருகாலத்தில் ஒலிம்பிக் பதக்கத்துக்கு ஹாக்கியையே நம்பியிருந்த நமது நாடு, தற்போது துப்பாக்கி சுடும் வீரர்களாலும், குத்துச்சண்டை வீரர்களாலும் ஒருசில பதக்கங்களைப்பெற்று அதன்மூலம் கௌரவம் காப்பாற்றப்பட்டு வருகிறது.  

பாஸ்கரன் தலைமையில் ஒலிம்பிக்கில் தங்கத்தையும், தன்ராஜ்பிள்ளை தலைமையில் ஆசிய கோப்பையையும் வென்ற பிறகு நமது ஹாக்கி சொல்லிக்கொள்ளும்படியான இடத்தைத் தக்க வைக்கவில்லை. ஒருமுறை 'ஹாங்காங்கில் நடந்த போட்டியில் மலேசியாவை இந்திய அணி தோற்கடித்தது' என்ற செய்திக்கு கமெண்ட் எழுதிய ஒருவர் 'இப்படி ஆங்காங்கே கிடைக்கின்ற சில வெற்றிகளின் மூலம்தான் இந்திய அணியின் மானம் காப்பாற்றப்படுகிறது' என்று கிண்டலடித்திருந்தார். கிரிக்கெட்டில் எவ்வளவு மோசமாகத் தோற்றபோதிலும் (தொடர் வெற்றிகள் எல்லாம் சமீப காலமாகத்தான்) ஆறுதல் அளித்து ஆதரவு தரத் தயாராக இருக்கும் நமது ரசிகர்கள், மற்ற விளையாட்டுக்கு, குறிப்பாக தேசிய விளையாட்டான ஆக்கிக்கு ஆதரவு அளிக்கத் தயங்குவது... ஸாரி... ஆதரவு அளிக்க மறுப்பது ஏனென்று தெரியவில்லை.

'ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' என்று கவிஞர் வாலி பாடல் எழுதினார். அந்த வரிகள் விளையாட்டுக்கும் பொருந்தும். மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற ககன் அஜீத்சிங், மற்றும் தீபக் தாகூர், அர்ஜுன் ஹாலப்பா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் நமது ஹாக்கி அணி சோர்வுற்றிருப்பது போதிய ஊக்கமும், ஆதரவும் அளிக்கப்படாமையினால்தான்.

இன்னொரு விளையாட்டை குறை சொலவதாக நினைக்க வேண்டாம். மற்ற் வீரர்கள் மைதானம் முழுக்க தேமேயென்று நின்றிருக்க, ஒவ்வொரு பந்தும் வீசும் முன் பெரிய ஆலோசனைகள் செய்த பின் வீச, அவர்கள் ஆலோசனை முடியும்வரை பேட்ஸ்மேன் மட்டையால் தரையைக் கொத்திக் கொண்டிருக்கும்படியான ஒரு விளையாட்டுக்கு இவ்வளவு ஆதரவு தரும் ரசிகர்களும், ஸ்பான்ஸர்களும், வாரியங்களும்... ஒரே நேரத்தில் அனைத்து வீரர்களும் சுறுசுறுப்பாக விளையாடும் ஹாக்கி விளையாட்டுக்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்தலாமே.

நடக்குமென்று நம்புவோமா...?.  

காஷ்மீரில் 'தேன் நிலவு'

அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் 'தேன் நிலவு' படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதரும் அவரது சித்ராலயா யூனிட்டாரும் எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டனர் என்பதை முன்னொருமுறை 'பொம்மை' சினிமா மாத இதழில் தெரிவித்திருந்தார். அந்தப்பகுதி இங்கே...

ஸ்ரீதர் சொல்கிறார்:

"தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதியல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப்பார்த்து சரியாக வரவில்லை யென்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றையெல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விருமிபினோம்.சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாமே என்பதனால்.

காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங்  எடுத்தவற்றை போட்டுப்பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டுமுறை மட்டும் 'டக்கோட்டா' விமானம் டெல்லிக்குப்போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச்சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னைசென்று, அங்கு விஜயா லேபட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.

அவ்வாறு சென்னையிலிருந்து பிரிண்ட் போட்டு, கொண்டுவரப்பட்ட அந்த படப்பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப்போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக்காட்சி முடிந்தபிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி (மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என்சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தியில்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம்.

உண்மையில் 'தேன் நிலவு' படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்புக்காக நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து, அந்த தியேட்டர் இருக்கும் கிராமம் வரையில் காரிலேயே செல்லும் அளவுக்கு ஒழுங்கான பாதை கிடையாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப்போகும்போது,  திரு M.N.நம்பியார், தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது".

 இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்..

எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களை அப்படங்களை உருவாக்கியவர்கள் வாயிலாகக் கேட்கும்போது உண்மையில் மலைப்பு ஏற்படுகிறது.

இதே போல பெரிய கேமராமேனாக இருந்து பிற்காலத்தில் கௌபாய் டைப் படங்களின் இயக்குனராக மாறிய எம்.கர்ணன், தான் கேமராமேனாக இருந்தபோது நிகழ்ந்த அனுபவங்களை ஒருமுறை சொல்லியிருந்தார். அவர் சொன்னது.....

'நான் மாடர்ன் தியேட்டர்ஸில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியபோது, அப்போது ட்ராலி வசதிகள் எல்லாம் கிடையாது. கேமராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு கதாபாத்திரங்களை எதிரில் நிற்க வைத்து நடிக்க வைப்போம். முடிந்ததும் கேமராவை வேறு இடத்துக்கு மாற்றுவோம். ஆனால் நடிகர்கள் நடிக்கும்போது கேமராவும் அங்குமிங்கும் மூவ் ஆனால் நன்றாயிருக்குமே என்று நானும் இயக்குனர் திரு டி.ஆர் சுந்தரமும் யோசித்தோம். அதன்படி, நான் கேமராவை கையில் வைத்துக்கொண்டு காரின் முன்புற பேனட்டில் உட்கார்ந்துகொள்ள, இயக்குனர் காரை ஸ்டார்ட் செய்து மெல்ல முன்னோக்கிப்போவதும், பின்னர் ரிவர்ஸில் எடுப்பதுமாக ஓட்டிக்கொண்டிருப்பார். அதுபோல இன்னொரு ஷாட்டில் கதாபாத்திரங்களை திறந்தவெளியில் நடிக்க வைத்துவிட்டு, அதேபோல் நான் கேமராவுடன் பேனட்டில் அமர்ந்துகொள்ள, அவர் நடிகர், நடிகையரைச்சுற்றி வட்ட வடிவத்தில் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டிருப்பார். படம் முடிந்து திரையிடப்பட்டபோது, இத்தகைய மூவ்மெண்ட் காட்சிகள் அப்போது திரைத்துரையினர், பத்திரிக்கைகள், ரசிகர்கள் என அனைவராலும் பாராட்டப்பட்டன"

இவ்வாறு எம்.கர்ணன் தெரிவித்திருந்தார். தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் அவை சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அப்போது அது சாதனைதானே.

Monday, June 27, 2011

சிவாஜி பற்றி ஸ்ரீதர்

எனது பதிவுகளைப் படித்து, தங்களது மேலான பின்னூட்டங்களையும், பதிவுகள் சம்மந்தமான கூடுதல் விவரங்களையும் பதித்து வரும் அனைத்து நல் இதயங்களுக்கும் என் நன்றி.

(முன்பு இதே தளத்தில் பதிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்த இப்பதிவு மீண்டும் இடம் பெறுகிறது. ஏற்கெனவே படித்தவர்களுக்கு பழையது, படிக்காதோருக்கு புதியது)

தமிழ் சினிமா இதழ்களில் முதன்மை வாய்ந்த 'பொம்மை' மாத இதழில் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் முன்னொருமுறை தன் மனம் திறந்த கருத்துக்களைக் கூறியிருந்தார். அவற்றுள் நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப்பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கள் ம்னதைக் கவர்ந்ததால், அப்பகுதி மட்டும் இங்கு இடம் பெறுகிறது. அதே கட்டுரையில் இயக்குனர் ஸ்ரீதர் தனது 'தேன் நிலவு' திரைப்படத்தை காஷ்மீரில் படமாக்க பட்ட கஷ்ட்டங்கள் பற்றிக்கூறியிருந்தது அடுத்த பதிவாக இடம் பெறுகிறது.

எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது அதில் சிவாஜி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது (1963) அவர் 'கர்ணன்' படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்துகொள்ளச்செய்தார். திருமணச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்கால், சிவாஜி பேசுகிறார் என்றார்கள். உடனே போனை வாங்கிப்பேசினேன். மறுமுனையில் சிவாஜி எனக்கு மனதார வாழ்த்துச்சொன்னார். அத்துடன் 'நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச்சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?' என்றுகேட்டார். சற்று முன்னர்தான் வி.சி.ஷண்முகம் எனக்கு கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லியிருந்தது நினைவுக்கு வர, 'ஆமாண்ணே, வந்திருக்காங்க' என்றேன். 'உன் கல்யாணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே' என்றார். சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச்சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தபோது, சிவாஜி 'இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்' என்றவர் என்னைப்பார்த்து, 'இதோ பாரு, இதுவரைக்கும் சதா ஸ்டுடியோ விலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்கோடு வீட்டுக்கு வந்துசேர். அதுமட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப்பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்' என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம். அந்த நேரத்தில் அவரோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு படம் எதுவும் பண்ணவில்லை. மற்றவர்களோடுதான் படம் பண்ணிக்கொண்டிருந்தேன்.

('காதலிக்க நேரமில்லை... காதலிப்பார் யாருமில்லை....')

'
காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார். 'அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன். சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.  

('பூமாலையில்... ஓர் மல்லிகை...')
சில பல காரணங்களால் நான் அவரை வைத்து தயாரித்து இயக்கி வந்த ஹீரோ 72' படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருந்தபோதிலும், (பின்னாளில் இப்படம் 'வைர நெஞ்சம்' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியானது) எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. 'உரிமைக்குரல்' பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன். 'பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (MGR) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இதுவரைக்கும் ஒருநாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வரமுடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் உண்டு' என்று வாழ்த்தினார்.

இவ்வாறு இயக்குனர் ஸ்ரீதர் கூறியிருந்தார். (என்ன காரணத்தாலோ நடிகர்திலகத்தை வைத்து அவர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண் படங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. சொல்ல மறந்துவிட்டாரா அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விட்டாரா என்பது தெரியவில்லை).